திங்கள், ஏப்ரல் 29, 2013

மங்களூர் மனோரமா -1

மங்களூரில் கதிரி என்ற பகுதியில் சில வருடங்கள் குடியிருந்தோம். ஒரு குன்றாக இருந்து குடியிருப்பான பகுதி. அங்கிருக்கும் மஞ்சுநாதர் (சிவன்) கோவில் பிரசித்தி பெற்றது.
கதிரி மஞ்சுநாதர் கோவில், மங்களூர் 
இரவில் ஏழுமணிக்கு முன்பாக வீடு வந்து சேரும் பாக்கியம் மாதத்தில் சிலநாட்கள் கிடைப்பதுண்டு. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். கேரளப் பாணியில் கோபுரமின்றி ஓடுவேய்ந்த உயரம் குறைந்த  ஆனால் பரப்பளவில் பெரிய கோவில். எவ்வளவு கூட்டம் வந்தாலும் அடங்கக்கூடிய பெரிய பிராகாரம். புராணகாலத்துப் பரசுராமர் ஏற்படுத்திய கோவில்.

புதன், ஏப்ரல் 24, 2013

மீண்டும் அமெரிக்கா-4


பால்டிமோரில் நிற்கும் பழைய கப்பல் 

இரவு பதினோரு மணிக்கு விடுதிக்குத் திரும்பி, தொலைக்காட்சிப் பெட்டியை திருகிய உடன், பாஸ்டன் (Boston)  மாரத்தானின் போது வெடிகுண்டு வைத்ததாகத் தேடப்பட்டு வந்த 19 வயது இளைஞன் ஸோக்கர் ஸர்ணயேவ் (Dzhokhar Tsarnaev) பிடிபட்டுவிட்ட செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. அவனை ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடிய படகினுள்ளிருந்து பிடித்தார்களாம். கழுத்திலும் காலிலும் குண்டுபட்டிருந்ததால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டார்களாம். 24 மணி நேரமாக ஊரடங்கு சட்டத்தின் கீழிருந்த பாஸ்டன் நகரம், குற்றவாளி பிடிபட்டுவிட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பொதுமக்கள் தெருவில் திரண்டு வந்து கொண்டாடியதைக் காட்டினார்கள்.

சனி, ஏப்ரல் 20, 2013

மீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்

 வியாழனன்று (18.4.2013) பகலில்  நியுஜெர்சியிலிருந்து நான்கு நாள் பயணமாக பால்டிமோர்/வாஷிங்டன்  வந்தோம். வசந்தகாலம் எங்களைத் தொடர்ந்து வந்தது. நியுஜெர்சியின் குளிரானது கொஞ்சம் கொஞ்சமாக விலகி, லேசான வெயிலுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. இடையில் டிலாவர்
என்ற ஊரில் சாலையோர இளைப்பாறும் விடுதியில் ஸ்டார்பக்ஸ் காப்பி சாப்பிட்டு வண்டிக்கு 'கேஸ்' நிரப்பிக்கொண்டு  பால்டிமோரை நெருங்கும்போது மழை தூற ஆரம்பித்துவிட்டது.

வியாழன், ஏப்ரல் 18, 2013

நாமொரு பாதை இடுவோம், வா! (கவிதை)

நாளை என்பதை யாரறிவார்?
நன்மை என்பதை யாரறிவார்?
வாழ்க்கை என்பதை யாரறிவார்?
வாழ்ந்து பார்ப்போம், வா தோழா!
 

நேற்றும் முன்னும் நடந்ததெல்லாம்
நெஞ்சின் அறையில் தூங்கட்டும்!
நேரம் ஒன்றே நம்சொத்தாய்
நினைத்தே இன்று நடப்போம் வா!
 

ஒவ்வொரு நாளும் உன் கண்ணில்
உதிக்கும் கனவோ ஏராளம்!
இன்றதை விட்டால் நனவாக்க
இன்னொரு நாளும் கிடைத்திடுமா?
 

காலை விடிந்ததும் சூரியனும்
காகம் சேவல் பறவைகளும்
ஆலய மணியின் ஓசையதும்
அன்பாய் அழைப்ப(து) உனையன்றோ?
 

ஞாயிறு வந்தால் விடுமுறையும்
நலமிழந்தாலே விடுமுறையும்
ஊர்சுற்றிடவே விடுமுறையும்
உனக்கே எத்தனை விடுமுறைகள்!
 

கழனியில் இட்ட விதையாலே
கனிவரும் என்றே எதிர்பார்ப்பாய்!
உன்னை யிட்டவர் உன்னிடத்தில்
உழைப்பைக் கேட்டால் தவறாமோ?
 
அடுத்தவர் வகுத்த பாதையிலே
அன்றாடம்தான் நடக்கின்றோம்
நமக்கும் இளையவர் நடப்பதற்கே
நாமொரு பாதை இடுவோம், வா!

-    கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


புதன், ஏப்ரல் 17, 2013

பி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி

தமிழ்ப் புத்தாண்டன்று (14-4-2013) சென்னையில் காலமானார், 82 வயதான பாடகர், திரு பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள்.

திரைப்படத்துறையில் இருப்பவர்களைப் பற்றி அனைவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கும். அதிலும், தமிழ் நாட்டில் டி.எம்.எஸ்., சீர்காழி, பி.பி.எஸ் என்ற மும்மூர்த்திகளைத் தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்த் திரையிசை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டால், இந்த மூவரை விட ஆளுமை நிறைந்த பாடகர்களை நாம் காண்பது அரிது.

மற்ற இருவரும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்துப் பாடகர்களானவர்கள். ஸ்ரீனிவாசோ, தெலுங்கராகப் பிறந்து, கன்னடத்தில் புகழ் பெற்று, அதன் பின் தமிழுக்கு வந்தவர். ஆனால் சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டது மட்டுமல்ல, தமிழுக்கு நிரந்தரமான பாடல்களையும் தந்தவர்.

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (6)


விடுமுறை எடுப்பதாய்
விண்ணப்பம் எழுதி
 
முடிப்பதற்குள் கூந்தல்
முடித்திடுவாள் இரண்டுதரம்!
***
அவசரமாய்க் கொறித்த
அரிசிச் சோறு
வயிற்றைப் பிசைய,
 
வழக்கம்போல் மாத்திரையும்
மயக்கம் கிளப்பிவிட,
 
கண்கள் இருள்சூழ
கையிரண்டும் தளர்ந்துவிழ,
 
சொந்த இடத்தில்
சூடுபட்ட அனுபவத்தில்
நெஞ்சம் புண்ணாகிக்
கடைவிழியில் நீர்நிறைய
 
நெற்றிப் புருவத்தில்
நெல்மணியாய் வேர்வை வர,
 
கன்னக் கதுப்பில்
கோலமென வேர்வையிட,
 
இரண்டு கரத்தினின்றும்
ஆறாய் அது ஒழுக,
 
முதுகுச்சட்டை
முழுதாய் நனைந்துவிட,
 
காலிரண்டும் ஈரமிட,
சேலை வழிதடுக்க,
 
        
 
நின்றாள்!
வியர்த்து நின்றாள்!
 
வேர்வை மழையதனில்
வேதனைக் குளத்தினிலே
நின்றாள்!
***
காதலிளம்
கன்னியரின்
 
கூந்தல் கவிதை,
குறுவிழிகள் தாம் கவிதை,
கொங்கை கவிதையென்று
 
குறிப்பெடுத்தீர்,
இதோ,
 
வேர்வை கவிதையடா!
வேதனைகள் கவிதையடா!
நெஞ்சில்
 
சொல்லாமல் நின்ற
சுமையெல்லாம் கவிதையடா!
 
பார்வை ஆழமெனில்
பார்ப்பதெலாம் கவிதையடா!
 
பாதையெலாம் கவிதையடா,
பாவையரின், மங்கையரின்
 
ஒவ்வோர் அசைவும்
உயிருள்ள கவிதையடா!
 
(மார்ச் 28, 1991 ல் எழுதியது)
© Y.Chellappa
 

 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

வேர்வை கவிதையடா (5)


அய்யா வரச் சொன்னதாய்
ஆள் வந்து கூப்பிடுவான்!
 
கூட இருப்பவர்கள்
கூடவந்து பேசாரோ?
ஏதோ
 
நடக்காத விபரீதம்
நடந்துவிட்ட பாவனையில்
அவளவளும் தன்பணியில்
அக்கறைபோல் இருந்திடுவாள்
 
கடைசி இருக்கைக்
காரி, யின்று வரவில்லை
இருந்தால் அவள் நாலு
இதமாய்க் கூறிடுவாள்....
 
‘அய்யா கூப்பிடறார்’
ஆள் மீண்டும் நினைவூட்டல்!
 
பொங்கிவரும் கோபம்
பொறுமிவரும் விம்மல்
அரை நிமிடம் போனால்
அழுகைவரும் போல் அச்சம்
 
ஒரு
 
பத்து நிமிடம்
பொறுக்க முடியாதா?
 
 
பத்து வருடம்
பணிபுரிந்து வருகின்றேன்
தாமதமாய்
 
எத்தனை நாள்வந்தேன்
இவர்களுக்குத் தெரியாதா?
 
அவமானப்படுதுதல்போல்
‘ஆப்செண்ட்’ போடுவதா?
 
அவசர வேலையென்றால்
ஆறுமணி ஏழுமணி
எட்டுமணி கூட
இருந்து உழைத்திருப்பேன்,
எனக்கா இந்த நிலை?
 
ஆத்திரமாய்ச் சீறிவரும்
அடிபட்ட நெஞ்சம்; போய்
அதிகாரி முகத்தில்
அறைந்துவிட உந்தல்வரும்.
 
தாமதத்தின் காரணத்தைத்
தானே எடுத்துரைத்து
‘ஸாரி’ சொல்ல முடியாமல்
மனத்திற்குள் மானப்போர்!
 
ஓடினாள், தாளெடுத்தாள்,
தட்டெழுத்தில்
கை பதித்தாள்:

 

வேர்வை கவிதையடா (4)


அடுத்த பஸ்சில்
அவசரமாய் உட்புகுந்து
சீட்டுக்காய்க் கை நீட்ட
 
இருந்த ஒரு நோட்டு
இருபதுரூபாய் நோட்டு
 
நடத்துனரின் கோபம்
நல்வசவாய் மழைபொழிய
 
ஒரு
குறுந்தாடிப் பயலும்
கூடவே பின்மொழிய
 
பெண்கள்,
வேலைக்குப் போவதே
வேண்டாத வேலையென்று
 
தொண்டுகிழமொன்று
கருத்தரங்கம் துவக்கிவிட,
 
வலப்புறமாய் பஸ்திரும்பி
வளைகையிலே இன்னொருவன்
 
இயல்பாய்த் தன்னுடலை இவள்மேலே சரியவிட,
 
சற்றே விலகிக்
கைப்பையைக் கைமாற்றித்
தலைக்குமேலே
கம்பியைப் பற்றுகையில்
 
கச்சிதமாய் ரவிக்கை
கையிடுக்கில் தையல் விட,
உட்கார்ந்த சில தடியர்
உற்றுற்றுப் பார்க்கிறதாய்
 
நெஞ்சம் குறுகுறுக்கும்
மேனியெல்லாம் கூசும்
 
கண்களிலோ,
 
காலம் கடந்ததென்று
கடியாரம் மொழிபேசும்.
 
சாலையிலே வாகனங்கள்
சரியாய் நகராது!
 
சாதிச் சங்கம்
நடத்துகிற ஊர்வலமாம்
 
பாதியிலே நின்றுவிடும்
பஸ்செல்லாம்! நடப்பதன்றி
 
வேறு வழியில்லை!
விறுவிறுப்பாய் நடைகூட்டி
 
அலுவ லகத்தை
அடைகையிலே அவள்வரவு
 
பத்து நிமிடம்
பாதிக்கப் பட்டிருக்கும்!
***
வழக்கமாய்ப் பிந்திவரும்
வழுக்கைத் தலையன் இன்று
 
முன்னால் வந்திருந்து
முகமெல்லாம் பல்லாவான்!
வருகைப் பதிவேட்டில்,
 
பெயருக்கெதிரே
பென்சிலிலே ஓரெழுத்து
ஆங்கில ‘ஏ’ போட்டிருக்கும்!