ஞாயிறு, ஜூன் 30, 2013


அவரவர் கவலை (கவிதை)


தோழன்-1.1

தண்ணீர் இல்லை நதிகளிலே

தரையைத் தோண்டியும் பயனில்லை

மழையும் பெய்ய மனதில்லை

மக்களுக் கேது மின்சாரம்?

தோழன்-1.2

கிணறும் உண்டு நீருண்டு

கீழே நூறடித்  துளையுண்டு

எடுத்தால் கிடைக்கும் குடிநீர்தான்

ப்போ வருமோ மின்சாரம்?

 ****

தோழன்-2.1

பிளஸ்-டூ மதிப்பெண் மிகவுண்டு

பிடித்த கோர்ஸிலும் இடம் உண்டு

கட்டணம் செலுத்தப் பணம் எங்கே?

கல்வித்துறையே பதில் சொல்வாய்!

தோழன்-2.2

படித்தேன் முடித்தேன் பட்டமுடன்

பட்டயம் சிலவும் நான் பெற்றேன்

வெற்றுப் பயலாய்த் திரிகின்றேன்

வேலை கொடுப்பவர் யாரிங்கே?

 *****

தோழன்-3.1

கட்சியும் உண்டு கொடியுண்டு

கைகலப் புக்கும் ஆளுண்டு

கூட்டணி உண்டு, எம்.எல்.ஏ.

கூட்டம் மட்டும் எமக்கில்லை!

தோழன்-3.2

கட்சியும் கொடியும் டி.வி.யும்

கைவசம் உண்டு, எம்.எல்.ஏ.

கைவிரல் இடுக்கில் நழுவுகிறார்

கட்சியை நடத்தல் எவ்வாறோ?

 ****

தோழன்-4.1

டாலர் வெளியே போகிறதாம்

ரூபாய் மதிப்புக் குறைகிறதாம்

பெட்ரோல் விலையைக் கூட்டுகிறார்

பிழைப்பது எப்படி? புரியவில்லை!

தோழன்-4.2  

தீராக் கவலை நமக்கேனோ?

தேனீர் விலையும்  ஏறும் முன்

சூடாய், அடிப்போம் சிங்கிள் டீ!

சூப்பர் ஸ்டார் படம் போவோமா?

-    கவிஞர் இராய. செல்லப்பா.

(c ) Y .Chellappa 
email : chellappay@yahoo.com  

சனி, ஜூன் 29, 2013


மூத்த மகள் ரம்யாவுக்குப்
பிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)


நடைவண்டி உனக்கென்று நான் வாங்கினேன் –உன்
நடைவேகம் அதற்கில்லை எனக் காட்டினாய்!
ஒருசைக்கிள் உனக்காகப் பரிசாக்கினேன் – அதை
ஒருமாலைப் பொழுதுக்குள் விரைந்தோட்டினாய்


காற்றூதும் நாய்ப்பொம்மை கையில் தந்தேன்-ஒரு
கையாலே காற்றெல்லாம் வெளியாக்கினாய்!
கங்காரு பொம்மை தான் காணாமல்போய்-அது
கைசேரும் வரை கதறி ஊர்கூட்டினாய்



'சீமா' பொம்மையுடன் ரம்யா, தங்கை அர்ச்சனா 

தரைமீதில் இலைபோட்டுப் பரிமாறினால்- நீ
தவழ்ந்தோடிக் கையாலே பறித்துண்ணுவாய்
உனையேந்திக் கிண்ணத்தில் அமுதூட்டினால்-நீ
உண்ணாமல் தப்பிக்க வழிதேடுவாய்

 
அ-ஆ-இ ஒருநாளில் உருவேற்றினாய்-நீ
அரைநாளில் மழலைப்பா உடன்பாடினாய்
தப்பாமல் பலநூல்கள் நீ நாடினாய்-என்
தமிழுக்குப் பலமான உறவாகினாய்

 

                                                    தம்பி அரவிந்த கார்த்திக்குடன் 

உனக்கென்றே ஒருகுட்டித் தலையணை தான்-நான் 
உன் கையில் தந்தவுடன் மகிழ்ந்தே போனாய்
அழுக்காகும் அதுவென்று மார்போடிட்டே - கை
அணைப்போடு தூங்கியதை யார் மறப்பார்!

 
கங்காரு பொம்மைதான் உன் தோழியே – அது
காணாமல்  போய்மீண்ட கதையும் உண்டே!
கண்ணோடு கண்ணாக வளர்ந்தாயேநீ – உன்
கண்ணுக்குள் எனையன்றோ காண்கின்றேன் நான்!


                                                    அமெரிக்கா வந்த புதிதில் 

ஊர்மாறி ஊர்மாறி நான் ஓடினேன் – நீ
ஒருநாளில் மணப்பெண்ணாய் உருமாறினாய்
நீயின்று அமெரிக்கப் பெண்ணாகியும் –மனம்
நீங்காமல் தமிழோடு உறவாடுவாய்
 
பள்ளி/கல்லூரிப் பருவம்: தங்கை, அக்கா, தம்பி 


தங்கைக்கும் தம்பிக்கும் தாயாகினாய் –என் 
தலைப்பிள்ளை யாய்க்  கடமை நிறைவேற்றினாய்
ஒருபிள்ளைக் குழந்தைக்குத் தாயாகினாய் –இன்று
உயர்வாகித் தனிநின்று வழிகாட்டினாய்

 
                                           பிட்ஸ்பர்க்கில் கணவர் ஜார்ஜ், மகன் வினயனுடன்  

கண்ணுக்குள் மணிபோல நீ வாழிய! - உன்
கணவருடன் பிள்ளையுடன் நீ வாழிய!
செல்வங்கள் பலபெற்று நீ வாழிய-எம்
செல்வமே, ரம்யாவே, நீ வாழிய!

  - உன் அன்புத் தந்தை
    கவிஞர் இராய.செல்லப்பா

திங்கள், ஜூன் 24, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)


 
இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள்-1



நிழலாகத் தெரிவது ஆவியோ?

திண்ணையில் நான் வந்து படுத்துக்கொண்டபோது இரவு மணி ஒன்பதரை. தலைமாட்டில் என்னுடைய பள்ளிக்கூடப் பையையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களில் நடத்திய பாடங்களை மனதுக்குள் கொண்டுவந்து கேள்வி பதிலாக ‘ரிவிஷன்’ செய்தேன்.

இரவு கருமையாகப் படரத் தொடங்கியது.

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)



பிட்ஸ்பர்க் – பிப்ஸ் கன்ஸர்வேட்டரியில் கண்ணாடி மனிதர்கள்
ஆவிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போது எனக்கு வயது பத்து.

இராணிப்பேட்டையில் வக்கீல் தெருவில் வெங்கடாத்திரி என்ற பிரபல வக்கீல் இருந்தார். அவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் ஒரு சந்து இருக்கும். ‘வக்கீல் தெரு சந்து’ என்று  பெயர். மொத்தம் மூன்றே வீடுகள். முதல் வீட்டில் நாங்கள் இருந்தோம். கூடமும், இரண்டு அறைகளும், நுழைந்தவுடன் முற்றத்தில் கிணறும் இருந்த ஓட்டு வீடு.

ஜெயபால் என்பவர் வீட்டு சொந்தக்காரர். ராணிப்பேட்டையின் உயிர் ஆதாரமாக விளங்கிய ஈ.ஐ.டி. பாரி கம்பெனியில் ஊழியர். அதிகம் படிப்பில்லை. மாதா மாதம் வாடகை வாங்க வரும்போது என் தாத்தா அவரை நீண்ட நேரம் நிற்க வைத்த பிறகு தான் தருவார். அதற்கு முன் “வாடகைப் பணம் பன்னிரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன் – இப்படிக்கு ஜெயபால்” என்று பாம்பு பஞ்சாங்கத்தின் மீது தைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற அட்டையில் எழுதியாக வேண்டும். அது தான் ரசீது.