வியாழன், அக்டோபர் 31, 2013

ஒளி காட்டும் வழி (தீபாவளிக் கவிதை)


































 
சிறுவன்(அண்ணன்):
பொழுதும் இன்னும் விடியவில்லை,
எழுப்பி விட்டார்கள்!
பொங்கும் எண்ணெய்க் குளியலிலே
மூழ்க டித்தார்கள்!

இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்
அனுமதி யில்லை!
என்னடா இது பண்டிகையாம்,
எனக்குப் பிடிக்கலை! 

சிறுமி(தங்கை):
இரண்டு மணிக்கே எழுந்து விட்டேன்,
எண்ணெயில் குளித்தேன்!
புதிய ஆடை புனைந்து விட்டேன்,
பாராய் என்னை!

வீதி எங்கும் சிறுவர் கூட்டம்!
விரைந்து வா அண்ணா!
வெடிவெடிக்கக் காத்தி ருக்கேன்,
சோம்பேறி அண்ணா! 

சிறுவன்(அண்ணன்):
அடுத்த வீட்டு அரவிந்தன்
எழுந்து விட்டானா?
அடுக்கடுக்காய்ச் சரவெடிகள்
வெடித்து விட்டானா?

சிறுமி(தங்கை):
அரவிந் தன் மட்டுமல்ல,
அகிலா, சீதா,
அநிருத்தும் வீதியில் தான்!
அழைக்கின் றார், வா! 

சிறுவன்(அண்ணன்):
அப்படியா, இதோ வந்தேன்,
அம்மா, அம்மா!
ஆடைகளைக் கொண்டுவா,
நேர மாகுதே! 

அம்மா:
ஆமாண்டா, சோம்பேறி,
என்னைச் சொல்கிறாய்!
அவசரமாய் உடுத்திக்கொள்,
இந்தா பட்டாசு!
சிறுமி(தங்கை):
அண்ணா அண்ணா வாவா வா
ஆரம் பிக்கலாம்!
அழகுக் கம்பி மத்தாப்புடன்
சாட்டை, சட்டியும்

சக்கரமும் மாத்திரையில்
பாம்பும் எழுப்பலாம்!
சத்தமின்றிப் பூவாணம்
சுட்டுத் தள்ளலாம்! 

சிறுவன்(அண்ணன்):
அத்தனையும் உனக்குத் தான்!
வெடிகள் மட்டுமே
அடுக்கடுக்காய் நான் வெடிப்பேன்
அஞ்சிட மாட்டேன்! 

அம்மா, அப்பா:
தாத்தாவையும் கூப்பிடுங்கள்
பாட்டியும் வரட்டும்!
தீபாவளி ஆனந்தத்தைப்
இரசித்திட வரட்டும்!

இல்லந்தோறும் வெளிச்சமாகி
இருட்டு மறையட்டும்!
ஒளிகாட்டும் வழியினிலே
உலகம் சிரிக்கட்டும்!

-    கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

(நண்பர் ரூபன் அவர்களே? இப்போது மகிழ்ச்சி தானே?)

 (c) Y.Chellappa
email: chellappay@yahoo.com 

சத்தியமானது, நித்தியமானது (கவிதையில் ஒரு கதை)


(கவிதையில் ஒரு கதை-சற்றே நீளமானது!)

படம்-நன்றி: இணையம்
 அது ஓர் காடு. ஆலமரத் தடி.
அவனோர் பக்தன். அவர்,குரு நாதர்.

 மானிடரில்லாக் கானகம் தன்னில்
வானகம் வேண்டித் தவம்புரிந்திருந்தனர்.

எந்த நிமிடம் எது செய்தாலும்
எண்ணும் எண்ணம் எதுவா னாலும்
அனுமதி கேட்டுக் குருவிடம் நாடி
அப்புறம் செய்தல் பக்தனின் பழக்கம்!

ஒருநாள்-
வாழ்வை வெறுத்து, இறையருள் நோக்கித்
தானும் குருவும் தவம்செயும் பாங்கில்
அவனுக் கேனோ விரக்தி வந்தது!

“குருவே, குருவே, இனிநான் இந்தப்
போலிவாழ்வை ஒப்பவே மாட்டேன்.

காவியாடை மேனியில் இருந்தும்
காசாசைதான் நெஞ்சைத் துரத்தும்!
பொன்னும் மணியும் பட்டும் பகட்டும்
எனக்கு மட்டும் இனிக்கா தா என்ன?
ஆகவே,


துறவறம் நீங்கிட அனுமதி வேண்டும்!
இல்லறம் துவங்கிட ஆசிகள் வேண்டும்!

இனிய மனைவி, எல்லாப் பொருள்வளம்
தம்மைப் பெற்றுத் தரணியில் வாழ்வேன்
விடைகொடுங் கள்”என விரும்பிக் கேட்டான்.

மோனத் தவத்தில் மூழ்கி யிருந்தவர்
கண்களை விழித்தார், கனிவுடன் பார்த்தார்.
“அன்பனே உன்றன் ஆசைகள் எல்லாம்
நிறைவேறட்டும், சென்றுவா” என்றார்.

சிரத்தால் வணங்கிச் சென்றான் பக்தன்.

சிற்றூர் விட்டான். சிறிது நடந்தான்.
பேரூர் சென்று பெருந்தனக்காரரின்
மருமகன் ஆனான். மனைவியும் தானும்
இன்பம் என்பதின் எல்லைகள் தேடி
இரவைக் கழித்ததில் பகலும் கழிந்தது.

பொருள்செய் திறனைப் புரிந்துகொள்ளவே
காலமாயிற்று. கடன்கள் பெருகின.
மாமன் விரட்ட, மணந்தவள் நழுவ,
வேறிடம் தேடி வேரின்றி அலைந்தான்.

காலம் கழிந்தது.
பூவும் தென்றலும் வசந்தமும் மாறி,
இலையுதிர் காலம் திரும்பிய பொழுதில்
அடவியைத் தேடி அவன்மீண்டும் வந்தான்.

கவலை சூழ்ந்த மேனிய னாகி
வடிவம் குறுகி வாடிக் கிடந்தான்!
கலங்கினான், கதறினான், கண்ணீர் சொரிந்தான்.
குருவின் தாள்களில் குமுறி விழுந்தான்.


“குருவே, குருவே, இதுசரி தானா?
துறவறம் துறந்தேன், இல்லறம் ஏகினேன்,
காசும் பணமும் கைகளில் புரளும்
என்று நடந்தேன், எழுந்தேன், ஓடினேன்.

ஆனால்,
மானுடம் என்பது மாயையின் தொகுப்பா?

தன்குடி பிழைக்கத் தான் உழைக்காமல்
அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பதே யிவன்
உயரிய பிழைப்பாய் உழைக்கின் றானே!

மெய்என் பதுவோ மேனி மட்டுமே!
மெய்என்பதொன்றும் மேனியில் இல்லையே!

உள்ளொன்று வைத்தே பேசிடு கின்றான்!
வஞ்சனை யின்றி வாழ்ந்திடல் அறியான்!
இந்த உலகமா எனக்குப் பொருத்தம்?
இல்லை குருவே, இஃதன்று என் கனா!

 எனக்கினி,
பணமும் வீண்டாம், பதவியும் வேண்டாம்,
பத்தினி வேண்டாம், இல்லறம் வேண்டாம்.

எந்த வொருபொருள் சத்திய மானதோ,
எந்த வொருபொருள் நித்திய மானதோ,
எந்த வொன்றுதான் முடிவின் முடிவிலும்
இல்லாது போகாத இயல்பு கொண்டதோ,

அந்தவொன் றையே நானினி விழைவேன்.
அதனைப் பெற்றிட ஆசிகொ டுங்கள்”
என்று பணிந்தான். “எழு” என் றார், குரு.

“அன்ப னேநீ அறிஞன் ஆ கினாய்!

இத்துணை விரைந்தே என்னிடம் வந்தாய்,
இறையருள் என்றே இதனைச் சொல்வேன்!

நித்திய மானதும் சத்திய மானதும்
வேண்டுமென் கின்றாய்! அப்படி யொருபொருள்
நிச்சயம் உண்டு! நீயதைப் பெறலாம்
அனுபவ மின்றேல் அறியவொண் ணாது!

நீயே தேடு! நிதமும் தேடு!
ஊரெலாம் தேடு! உலகெலாம் தேடு!
பக்குவ மாய்நீ பழுக்கும் நேரம்
சத்தியம் என்பதைக் காண்பாய், உறுதி!

ஒருவேளை,
எந்த வழியிலும் கிட்டா தாயின்,
ஆண்டுகள் பத்து ஆனபின் னாலே
என்வழி தேடி இங்கே வந்திடு!”

என்றார் குரு.இவன், பணிந்தான். சென்றான்.

புதுப்புதுப் பாதை,
புதுப்புதுப் பயணம்.

அனுபவம் சேர்ந்தது. அகமும் சிலிர்த்தது.
தேடல் மட்டும் தீர்வதா யில்லை!

“எந்த ஒருபொருள் சத்திய மானது?
எந்த ஒருபொருள் நித்திய மானது?”
என்ப தேயவன் கேள்வி யானது!

கானும் வானும் கடலும் மலையும்
விடைதெரியாமல் விழித்துப் பார்த்தன.
காலம் நகர்ந்தது, காலம் ஓடிற்று!
கேள்வியின் விடையோ கிடைப்பதா யில்லை.

ஒட்டி உலர்ந்தது பக்தனின் மேனி.
குழிகள் கண்களாய் ஆயின. கால்கள்
மெல்ல நடக்கவும் தளர்ந்து போயின.
நொந்து போனவன் நாட்களை எண்ணினான்.

பத்து ஆண்டுகள் பறந்தன வென்று
மனது சொல்லிற்று.

"இத்தனை ஆண்டுகள் கிட்டாத பதிலை
எத்தனை நாள்தாம் தேடிக்கொண் டிருப்பேன்?

குருதேவ ரிடமே கூடிப் பேசுவேன்”
என்றே துணிந்தான். புகுந்தான் கானகம்.
***
அடடா, என்ன மாற்றம்!

இவனும் குருவும் இருந்த இடமெலாம்
எங்கே போயின? எப்படி மறைந்தன?

அடர்ந்த மரமும் படர்ந்த கொடிகளும்
புலியும் மயிலும் பறவைக் கணங்களும்
எங்கே போயின?

பச்சை மண்டிய பரந்த கானகம்
வெற்றிடமான விந்தைதான் என்னே!

காட்டுத்தீயில் காடே மாண்டதோ?
நெருப்புக் காற்று நீண்டு பறந்து
இருந்ததை யெல்லாம் எடுத்து விழுங்கிற்றோ?

“ஐய கோ, என் குருதேவ ருக்காய்
உருகிவந் தேனே! உலகினில் அழியாச்
சத்தியப் பொருளைத் தெரியவந் தேனே!
சொல்லாப் பொருளுடன் போனதெங்ஙனம்?”

என்று புலம்பினான்.
“எங்கே என்குரு? எங்கே என்குரு?”
என்றே கதறினான்.

நடக்கவும் இயலாது நடுங்கிய கால்கள்
ஏதோ ஒன்றில் இடறி வீழ்ந்தன.
அஃதோர் மண்டை யோடு!

“அப்படியானால் அவர் அழிந்தாரா?
அகிலம் வெறுத்து அனைத்தையும் துறந்து
ஆண்டவன் ஒன்றே வேண்டின ராகி
உண்டி மறந்து உடையும் துறந்து
இந்த வனத்தில் தவமிருந் தவர்க்கே
இந்த கதியா?

மரணம் என்பது இவர்க்குமா உண்டு?

அனைத்தும் அழியினும் அழியாத பொருளை,
சத்தியப் பொருளை, நித்தியப் பொருளைக்
கேட்டுத் தெரிந்திடக் கண்ணில் கண்டிட
ஓடோடி வந்தும் உயிரிழந் தாரே!
இனிஎன் செய்வேன்?

ஐயம் தெளியாத நெஞ்சுட னேயே
எத்தனை நாள் தான் வாழ்ந்திடுவேன் நான்?”
-என்று புலம்பினான்.

இருண்டன கண்கள்.
தளர்ந்த கால்கள் தரையில் விழுந்தன.
மெல்ல எழுந்திடக் கைகளை யூன்றினான்.
மேனி எதற்கும் ஒப்பினால் தானே!

வாடிப் போன கையும் காலும்
வற்றிப் போன வயிறும் மனதும்,
அவனை
எழுந்து விடாமல் இழுத்துப் பிடித்தன!

அடுத்த நொடியில் ஐயகோ, அந்த
பக்தனின் மேனியை மரணம் தழுவிற்று!

எந்தப் பொருளை இத்தனை காலம்
தேடித் தேடித் திரிந்திருந் தானோ,
அந்தப் பொருளே அவனை நாடி
வந்து நிற்கையில் வாழ்வு முடிந்ததே!
இனி,

“மரணம் ஒன்றுதான் மானுட வாழ்வில்
சத்திய மானது, நித்திய மானது,
முடிவின் முடிவிலும் முடியா திருப்பது”

என்பதை அவனுக்கு
யார் உரைப்பார்கள்?
 (சென்னை வானொலியில் 19-4-1989இல் ஒலிபரப்பான கவிதை.)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

சனி, அக்டோபர் 26, 2013

அலையே வா! (சிறிய கவிதை)

 
பஹ்ரைனில் நான் -வருடம் 2006
வானத்து மேனியைத் தொட்டு-எழில்
வையத்தின் எல்லையாய்க் கால்பரப்பிட்டு
நீலத்தி ரைக்கடல் இங்கே – நல்
நித்திரை கொண்டு களித்திடல் காணீர்!

பொன்னென மேவிடும் நிலவு – அதன்
புத்தொளி கண்டு புறப்படும் அலைகள்
மின்னெனத் தாவிடும் மேலே – கரை
மீதினில் ஊர்ந்திடும் வேகத்தினாலே!

ஆயிரம் ஆயிரம் யுகங்கள் – கடல்
அன்னையின் மார்பினில் ஆடியதாலே
போயினதோ நீர் வேட்கை – மணல்
பூத்திடும் கரையினில் காணுது ஆசை?

வெள்ளியை உருக்கிய மேனி – அது
விண்ணினைத் தழுவிட விரைந்தது போலே
துள்ளி எழுந்திடும் சாயும் – உடன்
துணைவரத் துணைவரத் தொடர்ந்துமுன் னேறும்!

ஏழையின் கனவுகள் போலே – எழும்
இளமையின் ஆசைகள் தொடர்வது போலே
கோழையின் அச்சங்கள் போலே – அலை
கூட்டங்களாகவே வாழ்ந்திடல் கண்டேன்!

தனிமையில் இன்பங்கள் இல்லை – எனும்
தத்துவம் தன்னை ஞாலத்தில் வாழும்
மனிதருக் காகவே சொல்ல – அலை
வந்திங்கே பேசி மறைந்திடல் கண்டேன்!

எல்லையிட்டே நிற்கும் கரைகள் – அதை
எத்திவிட்டே அலை ஏகிடப் பார்க்கும்
வெல்வதுண்டோ ஒருநாள்? – எனில்
விடுவதுண்டோ அலை, வேகத்தைத் தானும்?

மாந்தருக்கே இது பாடம் – வெற்றி
மாலையைச் சூடிட யார் முனைந்தாலும்
சோர்ந்திட லின்றி மென் மேலும் –செயல்
துணிந்திடல் வேண்டும் என்பது காணீர்!

   - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
             (1988 இல் எழுதி இதுவரை வெளிவராத கவிதை).

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

வெள்ளி, அக்டோபர் 25, 2013

காசி யாத்திரை (இன்னொரு தீபாவளிக் கவிதை)


பனிகொழுத்த இமயமதில்
நடனமிடும் ஈசனவன்

முடிதனிலே அடைந்திருந்தாள் நங்கை  - அவள்

முழுப்பெயரோ புனிதமுள்ள ‘கங்கை’ – அதை

விடமுடியாத் தாகமுடன்

ஒருமனதாய்த் தவமிருந்து

புவிதனிலே பகிரதனாம் பிள்ளை – கொண்டு

புயலெனவே தவழவிட்ட எல்லை...!  (1)

 

‘காசி’யெனும் புனிதநகர்

காசினியில் உயர்ந்ததுவாம்

சாத்திரங்கள் சொல்லுகின்ற பாடம் – அதில்

காலெடுத்து வைத்தவர்க்கும் யோகம் – அங்கே

மாண்டவர்கள் மீண்டுவந்து

மண்ணினிலே பிறப்பதில்லை

மறைந்திடுமாம் பிறவியென்னும் வேடம்! – என

மந்திரங்கள் சொல்லுமடா நாளும்!  (2)

 

நீதியுடன் இருந்தாலும்

நியாயமுடன் நடந்தாலும்

மானிடரின் வாழ்வினிலே ‘பாவம்’ – எந்த

வகையினிலும் சேர்ந்துவிடும் நாளும் – அது

வாய்மொழியில் தான்வருமோ

வசைமொழியில் தான்வருமோ

ஊரிழுக்கும் தேரேனவே ஓடும் – ‘பாவம்’

நீயிருக்கும் திசையினிலே சேரும்!  (3)

 

 

பாவமது எந்தவகை

பழையதுவா புதியதுவா

யாவுமிந்தக் காசியதில் போகும் – கங்கை

யாற்றினிலே மூழ்கியதும் சாகும் – இனி

மீதமுள்ள வாழ்க்கையதில்

நூறுபிழை செய்தாலும்

பாவமது சேராதாம் உன்னை – கங்கை

பாகிரதி செய்வாளாம் நன்மை!  (4)

 

பாவமதை நாமுமினிப்

போக்கிவிட வேண்டுமெனச்

சுற்றமுடன் சென்றிருந்தேன் நானும்- காசி

சுற்றிவந்து பார்வையிட்டேன் நாளும் – அதைச்

சொல்லவந்தால் வார்த்தையிலே

உள்ளம்வெந்து போகுதடா

உண்மைநிலை எண்ணிவிட்டால் கூசும் – நெஞ்சம்

உருகுதடா, உதடுமட்டும் பேசும்! (5)

 

ஈசன்முடி மேலிருந்து

இறங்கிவந்த கங்கைநதி

ஓடிவரும் பாதையிலே தானே – காசி

ஊர்க்கழிவும் சேருதடா நாளும் – மெல்ல

நீரினிலே நாமிறங்கி

மூழ்கியெழும் போதினிலே

நாறுதடா காலடியில் சேறும் – அதற்குள்

நாலுபக்கம் கூட்டம்வந்து சேரும்! (6)

 

பாவையர்கள் ஆடைகளை

மாற்றுகின்ற வேளைதனைப்

பார்த்திருக்கும் கூட்டமொன்றும் உண்டு – கங்கைப்

படித்துறையில் சூழ்ந்திருக்கும் நின்று – வந்த

யாத்திரிகர் உடைமைகளைக்

காத்திருந்தே கொள்ளையிடும்

காசியிலே பாவமில்லை என்றால் – இந்தக்

காசினியே பாவமில்லை யன்றோ? (7)

 

செத்தவர்கள் மேனிதனைப்

பட்டுத்துகில் போர்த்திவந்து

வைத்திருப்பார் வரிசையிலே பார்த்தோம்  - அனல்

வைப்பதற்குக் காத்திருப்பார் பார்த்தோம் – கொண்டு

வைத்துவிட்டுப் போனவர்கள்

கண்மறைந்து போனவுடன்

பாதியிலே தூக்கிடுவார் பிணத்தை – கங்கைப்

பாய்ச்சலிலே வீசிடுவார் நிணத்தை! (8)

 

காசியிலே போனவுயிர்

சொர்க்கமதைச் சேருமென்று

கனவுகண்ட மேனியிலே தானே – கங்கை

யாற்றினிலே நெருப்பினிலே தானே – புதுப்

பாவமெல்லாம் தான்படிந்து

பாசியுடன் போட்டியிட்டு

மீனினங்கள் உண்ணும்உண வாகும் – மிச்சம்

மீந்தவுடல் மிதந்தபடி சாகும்! (9)

 

முன்னோர்கள் வானுலகில்

தள்ளாமல் வாழ்ந்திடவே

சடங்குகளைச் செய்திடவும் கொள்ளை – கொள்ளை

காசுபணம் வேண்டும், பகல் கொள்ளை! – இதைக்

காண்கையிலே மானுடத்தைக்

கண்டாலே வெறுப்புவரும்!

என்னசுற்றம்  என்ன இது பிள்ளை – அட,

ஏனிதற்கோர் விடிவுஇங்கே இல்லை? (10)

 

என்றுமனம் சொல்லிடினும்

எண்ணமிட்டால் கங்கைநதி

என்னபிழை செய்ததிங்கே சொல்வீர்! – மனிதன்

இட்டபிழை அத்தனையும் என்பேன்! – கங்கை

அன்றுமுதல் இன்றுவரை

தன்கடமை செய்தபடி

ஆடிவரும் ஓடிவரும், பாடி – காசி

யாத்திரையைத் தேடிவரும் கூடி!  (11)

 (தில்லி வானொலியில் 30-6-1990 அன்று ஒலிபரப்பான கவிதை).
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273